சிவகாசி தொகுதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காமல் நேரிடையாக மோத தி.மு.க.,- அ.தி.மு.க., தயாராகி வருகின்றன. சிவகாசி தொகுதியை பெற வேண்டும் என அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., ஆரம்பத்தில் இருந்தே முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொகுதிக்கு மூன்று பேர் வீதம் அ.தி.மு.க., கட்சி தலைமையால் அழைக்கப்பட்டவர்களில் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் அழகர்சாமி ஆகியோர் அழைக்கப்பட்டனர். இவர்களில் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் தொடர்ந்து தொடர்பில் இருப்பவராகவும், "ஆக்டிவ்' ஆக உள்ளவருக்கு "சீட்' வழங்க கட்சி தலைமை ஆலோசித்துள்ளது. சிவகாசி தொகுதி தே.மு.தி.க.,விற்கு தான் ஒதுக்கப்படும் என்று இருந்த நிலையில் அ.தி.மு.க.,வினர் நேர்காணலுக்கு பின் இத் தொகுதி அ.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை, அக் கட்சியினரிடையே உற்சாகத்தை அளித்துள்ளது. 1991க்கு பின் இத் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடவில்லை. அதன்பின் நடந்த தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கி வந்தது. 20 ஆண்டுகளுக்கு பின் சிவகாசி தொகுதியை அ.தி.மு.க., வசமாக்க காய் நகர்த்தி வருகிறது. தி.மு.க., கூட்டணி: மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய தொகுதிகளை தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கோரி வந்தது. விருதுநகர் தொகுதியை இளைஞர் காங்கிரஸ் பிரிவிற்கும், ராஜபாளையம் தொகுதியை சிதம்பரம் ஆதரவாளருக்கும் பெறும் முயற்சியில் கோஷ்டி தலைவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். ஆனால் சிவகாசி தொகுதியை தங்களுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்பதில் காங்., வேகம் காட்டவில்லை. இதனால் சிவகாசி கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் தி.மு.க.,வே போட்டியிடும் என கட்சியினர் மத்தியில் கருத்து நிலவுகிறது. தி.மு.க.,விற்கு தொகுதி ஒதுக்க இருப்பதால் ஒன்றிய தலைவர் வனராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் உதய சூரியன், ஏற்கனவே இருமுறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் மனைவி அன்னக்கிளி ஆகியோர் சீட் பெற தொடர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பின் சிவகாசி தொகுதியில் அ.தி.மு.க.,-தி.மு.க., நேரடி மோதும் சூழ்நிலை உருவாகும் என இரு கட்சியினரும் நம்பிக்கையில் உள்ளனர்.
No comments:
Post a Comment